விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் புல்லலக்கோட்டை ஊராட்சி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ. 3. 54 இலட்சம் மானியத்தில் புதிய வீடு கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளியிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
புல்லலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ. 50 ஆயிரம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளியில் அடிப்படை வசதிகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் முறைகள், குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.