விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை கோட்டைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மனைவி முத்துமாரி(32). கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். கண்ணன் வந்து வீட்டிற்கு அழைத்த போது, முத்துமாரி செல்ல மறுத்து வந்தார். அதற்கு கணவருடன் செல்லுமாறு முத்துமாரியின் அண்ணன் முனியசாமி மகன் மாரிச்சாமி(24) சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி இரவு முத்துமாரி வீட்டிற்கு வந்த கண்ணன் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். முத்துமாரி கணவருடன் செல்ல மறுத்ததால், மாரிச்சாமி அவரை கத்தியால் குத்தினார். இதுகுறித்த புகாரில் ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாரிச்சாமியை கைது செய்தனர். வழக்கு விசாரணை ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் மாரிச்சாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.