ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது. 52 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம், ரொக்க பணம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பு பகுதியில் இயங்கி வரும் பள்ளி அருகே உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பாக வைத்து இருசக்கர வாகனம் மூலம் இளைஞர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக வத்திராயிருப்பு போலீஸாருக்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் விஜய் சண்முகநாதன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் வத்திராயிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கர்ணன் என்பவர் இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 52 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம், ரொக்க பணம் ரூ.12,560/- பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.