ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ. புதுப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ்(45). இவரது மகன் கார்த்தீஸ்வரன்(25). இவர் புதுக்கோட்டையில் எலக்ட்ரீசியன்
வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி உறவினரின் இறப்புக்காக கார்த்தீஸ்வரன் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் பிற்பகலில் கார்த்தீஸ்வரன் தனது அக்கா மகன் கணேஷ்குமார், நண்பர் வெங்கடேஷ் ஆகியாருடன் கிருஷ்ணன்கோவில் சென்றார். அதன்பின் கார்த்தீஸ்வரன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தங்கராஜ், கணேஷ்குமாரிடம் கேட்ட போது ராமச்சந்திராபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே வைத்து மது அருந்து விட்டு, வெங்கடேஷூடன் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். பல இடங்களில் தேடியும் கார்த்தீஸ்வரன் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து, ராமச்சந்திராபுரம் விவசாய கிணற்றில் தேடினர். அப்போது, கிணற்றில் இருந்து கார்த்தீஸ்வரன் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.