விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் நேற்று மார்ச் 20 50வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலாளர் அருணா அசோக் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிர்வாகக் குழு உறுப்பினர் குணசிங் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சுதா பெரியதாய் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் அகிலா கலந்துகொண்டு 2024-ம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, பெண் கற்ற கல்வி நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் அமையவேண்டும். இந்தக் கல்லூரியில் படித்து தற்போது பட்டம் பெற்றுள்ள மாணவிகளும் பல்வேறு துறைகளில் தடம் பதிக்கவேண்டும்.
மாணவிகள் தங்களுக்குக் கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் உறுதியுடன் ஏற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் தொழில்முனைவோராக வளர்ந்து வெற்றியும், மகிழ்ச்சியையும் பெறவேண்டும். நிகழ்ச்சியில் இளநிலை, முதுநிலை என மொத்தம் 957 மாணவிகள் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற மாணவிகள் முன்னதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கல்லூரிப் பேராசிரியர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.