ராஜபாளையத்தில் கொட்டி தீர்த்த மழை. விவசாயிகள், பொதுமக்கள்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை முதல் நண்பகல் வரை கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர் இதனிடையே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மற்றும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருந்தது.
இந்நிலையில் வழக்கம்போல், இன்று காலை வெயில் வாட்டி வந்தநிலையில், திடீரென மேகங்கள் இருண்டு, பலத்த காற்றுடன் ராஜபாளையம் நகர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைபகுதியான தளவாய்புரம், சேத்தூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டிதீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கடந்த ஒரு மாத காலமாக மழையின்றி, வெயிலில் கடும் அவதியடைந்து வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், கொட்டி தீர்த்த மழையால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.