விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. சுமார் 5,000 குடியிருப்புகள் இந்த ஊராட்சியில் உள்ளன. இந்நிலையில் பாளையம்பட்டி ஊராட்சி பகுதிகளான முத்தரையர் நகர், திருக்குமரன் நகர், சிலோன் காலனி, காமராஜர் நகர், வேல்முருகன் காலனி, ராஜீவ் நகர், புளியம்பட்டி காலனி மற்றும் சுற்றியுள்ள விரிவாக்க பகுதிகள் முழுவதையும் அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில் பாளையம்பட்டி ஊராட்சி பகுதியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைத்தால் வீட்டு வரி உயரும், 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும், பத்திரப்பதிவு கட்டணம் பல மடங்கு உயரும் என புகார் தெரிவித்து பாளையம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்னால் குவிந்தனர். மேலும் பாளையம்பட்டி பகுதியை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.