விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர்(பொறுப்பு) கனகராஜ் தலைமையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பெண் விவசாயி வாசுகி,
படைத்தவன் மட்டும் கடவுள் அல்ல பசியை போக்கும் ஒவ்வொரு விவசாயியும் கடவுள்தான் அப்படிப்பட்ட விவசாயிகள் காட்டு பன்றிகளால் பாதிக்கப்படுகின்றனர். எனது கிராமத்தில் நான் நிறைய விவசாயிகளை உருவாக்கியுள்ளேன் அவர்களுக்கு நிறைய பயிற்சிகள் வழங்கி உள்ளேன். விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 129 ஏக்கர் நிலங்களை சிப்காட் பயன்பாட்டிற்காக கையகப்படுத்த உள்ளனர். சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் உள்ள அந்த வேளாண் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஒரு மண்ணை கூட நாங்கள் எடுக்க விடமாட்டோம் என பேசினார்.
மேலும் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் சுமார் 202 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சுமார் 129 ஏக்கர் நிலத்தை சிப்காட் பயன்பாட்டிற்காக அரசு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில் அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இதனை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.