விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (57). இவரது குடும்பத்தாருக்கும் இவரது எதிர் வீட்டில் வசிக்கும் முத்துலட்சுமி என்பவரது குடும்பத்தாருக்கும் இடையே இருவரின் வீடுகள் நடுவே செல்லும் பாதை சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக இரு குடும்பத்தினரும் அவ்வப்போது சண்டை போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கற்கள் வீசி தாக்கி கொண்டனர். இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாரியம்மாள் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் மகள் கர்ப்பிணி பெண்ணான ரம்யா இருவரும் காயம் அடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கற்களை வீசி தாக்கி கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பந்தல்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.