தமிழகத்தில், விழுப்புரம், மயிலாடுதுறை, தேனி ஆகிய நகராட்சிகள், சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 1998ம் ஆண்டு சட்டம் 3வது பிரிவு (4)ம் உட்பிரிவின்படி, நகராட்சி மன்றங்கள், பல்வேறு நிலைகளாக வகைப்படுத்தப்படுகிறது. அதன்படி, முந்தைய 3 ஆண்டுகால சராசரி வருவாய் அடிப்படையில், நகராட்சி மன்றங்கள் 2ம் நிலை (ஆண்டு வருவாய் 6 கோடி ரூபாய்க்கு மிகாமல்), முதல் நிலை (6 கோடி முதல் 9 கோடி ரூபாய்க்கு மிகாமல்) என வகைப்படுத்தப்படுகிறது.
தேர்வு நிலை (9 கோடி முதல் 15 கோடி ரூபாய்க்கு மிகாமல்) சிறப்பு நிலை (15 கோடி ரூபாய்க்கு மேல்) ஆகிய பல்வேறு நிலைகளாக தரம் உயர்த்தப்படும். இந்த விதிமுறைகளின் படி, விழுப்புரம், மயிலாடுதுறை, தேனி ஆகிய நகராட்சிகள், சிறப்பு நிலைக்கும், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவாரூர், தென்காசி, தாராபுரம் போடிநாயக்கனுார் ஆகிய நகராட்சிகள் தேர்வு நிலைக்கும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதேபோல், காங்கேயம், திருமுருகன்பூண்டி, வேதாரண்யம், ராமேஸ்வரம், ஜெயங்கொண்டம் ஆகிய நகராட்சிகள் முதல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளன.