விழுப்புரத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாநில செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். பஞ்சாப் விவசாய சங்க தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, மத்திய அரசு தண்டிப்பதை நிறுத்த வேண்டும். கரும்புக்கும், நெல்லுக்கும் உரிய விலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதனையடுத்து, நகராட்சி திடலில் இருந்து தடையை மீறி ஊர்வலமாக வந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலக வாயில் முன் சிறிது நேரம் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துச் சென்றனர்.