விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞர்களின் தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் நிதிக் கடன்களை வழங்க முன்வர வேண்டும் என்று ஆட்சியர் சி. பழனி வலியுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது: விழுப்புரம் மாவட்டத்தில் வல்லம், மயிலம் பகுதிகளில் சுமார் 1000 சிறு, குறு விவசாயிகளால் அவுரி செடி பயிரிடப்படுகிறது. இந்த பயிர் ஜவுளி, அலங்காரம் மற்றும் மருத்துவத் தொழில்களில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஆதரிப்பதற்காக உழவர் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்குவதற்கு ரூ. 38.66 லட்சத்தை நபார்டு வங்கி அனுமதித்துள்ளது.
உழவர் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்குவதன் மூலம், விவசாயிகளை ஒருங்கிணைத்து திறன் மேம்பாடு, மதிப்புக் கூட்டுதல் மற்றும் நல்ல விலையை உறுதி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற வேண்டுமெனில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிகளும் இளைஞர்களின் தொழில் திட்டங்களுக்கு திறந்த மனதுடன் நிதிக் கடன்களை வழங்க முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர் சி. பழனி. இந்த கூட்டத்தில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.