இளைஞர்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களின் அடையாளம் ஏதுமின்றி புகார் தெரிவிக்கலாம். இந்நிலையில் இந்த செயலி குறித்த விழிப்புணர்வு விளக்கக் கூட்டம் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இரா. சிவக்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றத்தின் துறை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மன்ற மாணவர்கள் தங்களது அறிதிறன் கைப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவராமன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.