விழுப்புரம் அடுத்த சேர்ந்தனுார் ரயில் நிலைய பகுதியில், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துசெல்வம் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், கடலுார், மஞ்சக்குப்பம் தட்சணாமூர்த்தி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் பாலகுரு, 19; எனவும், ரயிலில் நகை திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு மே 18ம் தேதி, ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த, கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி இலக்கியா என்பவரின் ஒன்றரை சவரன் செயினை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, பாலகுருவை கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.