விழுப்புரத்தில் அனுமன் ஜெயந்தியொட்டி நேற்று ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. வி. க. இராமசாமி வீதி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது. மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. மூலவர் ஆஞ்சநேயர், எலுமிச்சை பழம் மாலை மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், பிறகு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டும், வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்பட்டும் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தும், விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். இதேபோல், பல்வேறு ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.