விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. பெரும்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக பெரும்பாக்கம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை காணை ஒன்றியக்குழுத் தலைவர் நா. கலைச்செல்வி திறந்து, பயன்பாட்டை தொடங்கி வைத்தார். நிகழ்வில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், காணை தெற்கு ஒன்றியச் செயலருமான கல்பட்டு வி. ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, செல்வராஜ், மதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.