கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த பனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கலா, 54; இவர் கடந்த, 25ம் தேதி ஆஸ்பிட்டல் சாலை, எஸ். பி. ஐ. , ஏ. டி. எம். , மையத்தில் மகன் வங்கிக்கணக்கில், பணம் செலுத்த சென்றார்.
அங்கு மாற்றுத்திறனாளி ஒருவர் மையத்தின் பாதுகாவலர் எனக்கூறி, ரூ. 40 ஆயிரத்தை கலாவிடம் வாங்கி, அவர் சொன்ன வங்கிக்கணக்கில் செலுத்தினார். தொடர்ந்து அவரது ஏ. டி. எம். , கார்டை மாற்றி கொடுத்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டார். அடுத்த சில நிமிடங்களில், அவரது மகன் வங்கி கணக்கில் இருந்து, ரூ. 25 ஆயிரம் காணாமல் போனது தெரிந்தது.
இது குறித்து கலா திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
சி. சி. டி. வி. , காட்சிகளின் அடிப்படையில், அந்த மர்ம நபர், எலவனாசூர் கோட்டை அடுத்த வீரமங்கலத்தைச் சேர்ந்த தவ்ஹீத் அஹமத்கான் மகன் வாஹித் கான், 36; என தெரிந்தது.
பள்ளிப்படிப்பின் போது, மின் விபத்தில் வலது கையை இழந்தவர், எறையூர் பகுதியில் கறிக்கடை நடத்தி கொண்டே, திருட்டு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், பைக் மற்றும் ரூ. 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.