அரகண்டநல்லுாரில் இலவச வீட்டுப் பட்டாவிற்கு சொந்தமான மாற்றுத்திறனாளிகள், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு: மாற்றுத்திறனாளிகள் சந்திரா, கோவிந்தம்மாள், அஞ்சலை, தண்டபாணி, ஏழுமலை உள்பட 23 பேருக்கு கண்டாச்சிபுரம் தாலுகா அரகண்டநல்லுார் பகுதியில் கடந்தாண்டு தமிழக அரசு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியது. அதில் தற்போது அவரவர் வசதிக்கேற்ப வீடுகட்டி வருகிறோம்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எங்கள் குடிமனைக்குள் அத்துமீறி வந்து எங்களை மிரட்டி கொட்டகை அமைத்தால் பிடுங்கி விடுவதாக தெரிவித்தனர். நாங்கள் குடிசைகளை அமைத்துவிட்டு எங்களின் சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டோம். அந்த நபர்கள் எங்களது குடிசைகளை அகற்றி கட்டுமானப் பொருட்களை களவாடிச் சென்றுள்ளனர். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்ற தனிப்பிரிவு போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.