விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெல் சாகுபடியில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் சிறப்புப் பரிசு மற்றும் ரூ. 7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படவுள்ளது. இதில் பங்கேற்கும் விவசாயிகள் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும்.
விவசாயிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சன்னநெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக திருந்திய நெல் தொழில் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்திருக்க வேண்டும். இதில் பங்குபெறும் விவசாயிகளின் வயலில் குறைந்தபட்சம் 50 சென்ட் அளவில் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். எனவே, பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகி, நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணமாக ரூ. 150-ஐ செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.