திண்டிவனம் - சென்னை சாலையில் கோனேரிக்குப்பத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான பஸ் நேற்று காலை 6:30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இரவு பணி முடித்து திரும்பிய 15 ஊழியர்கள் இருந்தனர். டிரைவர், சென்னை சாலையிலிருந்து திண்டிவனம் வருவதற்காக 'யூ டர்ன்' எடுத்து பஸ்சை திருப்பினார். அப்போது அந்த வழியாக, திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், கம்பெனி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் சாரதியான கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனிஷ், 34; மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு, ஆம்னி பஸ் சாரதி அனிஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். தனியார் நிறுவன ஊழியர்களான கீழ்மாவிலங்கை சதீஷ்குமார், 35; கட்டளை மோகனபாலா, 31; சாரம் சதீஷ்குமார், 35; நெடிமோழியனூர் புவனேஸ்வரன், 24; பூதேரி சஞ்சய், 27; ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தினால், திண்டிவனம் - சென்னை சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.