பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் எவ்வித விடுபாடுமின்றி பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் அலுவலகம், இந்திய அஞ்சல் கட்டண வங்கி மற்றும் பொது சேவை மையங்களில் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்திட்டத்தில் 20-வது தவணை வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்பட உள்ளதால் முகாமில் தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விவரங்கள் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது, e-KYC போன்ற அனைத்து விதமான முழுமையற்ற விவரங்கள் சரி செய்து விவசாயிகள் பயன்பெறலாம். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் நிலஉடமை பதிவு மேற்கொண்டு 20-வது தவணையை பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் இறந்த பயனாளிகள் விவரம் சமர்ப்பிக்காமல் இறந்த பிறகும் தவணை தொகையை பெற்று வருவது ஆய்வில் தெரியும் பட்சத்தில் அத்தொகையை வாரிசுதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். எனவே, இறந்த பயனாளிகளின் சான்றிதழினை சமர்ப்பித்து அவர் பெற்று வரும் நிதி நிறுத்த வேண்டும். மேலும் வாரிசுதாரர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.