மாணவா்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் கலை அரங்க செயல்பாடுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 30 வகையான கலைத்திருவிழாவில் கலந்து கொண்டு 137 பேர் வெற்றி பெற்றனர். இதில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பைச் சார்ந்த 75 மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கும், 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 62 பேர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கும் கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க செல்ல இருந்தனர்.
மேலும் மாநில அளவிலான கலைத்திருவிழாவில் கலந்துகொள்ள செல்லும் மாணவ மாணவிகளின் பேருந்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேருந்து ஓட்டுனரிடம் மிக கவனமாக பேருந்தை இயக்குங்கள் என அறிவுரை வழங்கினார்.