திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை பகுதியில் முறையான மருத்துவம் படிக்காமலே போலி மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சி உத்தரவின் பேரில் தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதியில் சோதனையில் மேற்கொண்டனர்.
அப்போது திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியில் சேர்ந்த வாகித் மகன் அப்துல்லா(49) என்பவர் முறையான மருத்துவம் படிக்காமல் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசியம் மருந்துக்கள் குறித்த இரண்டரை ஆண்டு படிப்பை மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
அப்துல்லாவிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி தலைமை மருத்துவர் சிவகுமார் மருத்துவம் பார்க்க சென்றபோது வந்திருப்பது தலைமை மருத்துவர் என அறியாமல் அப்துல்லா மருத்துவம் பார்க்க முயன்றுள்ளார். அப்போது அவரை கையும் களவுமாக மருத்துவ குழுவினர் பிடித்தனர்.
அதன்பின் அவரிடமிருந்து 2000 ரூபாய் மதிப்புள்ள மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தலைமை மருத்துவர் சிவகுமார் பறிமுதல் செய்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.