தமிழக அரசு கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூறு இடங்களில் 100 நூலகங்களை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொது நூலக துறை சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நூலகங்களை திறந்து வைக்க முடிவெடுத்தது.
முதற்கட்டமாக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (ஜூன் 10) தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக நூலகங்களை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் தரை தளத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி, சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட நூலக அலுவலர் உள்ளிட்டோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து அருகாமையில் அரசு மூலமாக வழங்கப்படும் இலவச TNPSC தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு நூலகத்தை சரியான முறையில் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும், வேறு ஏதேனும் புத்தகங்கள் தேவைப்பட்டால் கூறுங்கள், நூலகத்தில் வைக்க ஏற்பாடு செய்கிறோம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துச் சென்றார்.