ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதியில் 46 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் மதிய உணவின் போது கலெக்டர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மதிய உணவு அருந்திய மாணவர்கள் குறைவாக இருந்தனர்.
இதனால் மற்ற மாணவர்கள் எங்கே என்று கலெக்டர் கேட்டதற்கு, அவர்கள் பள்ளியில் வழங்கக்கூடிய உணவை உண்டு வருகின்றனர் எனதெரிவித்தனர். தொடர்ந்து விடுதி மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்ட வெஜிடபிள் பிரியாணியை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
அப்போது உணவில் காய்கறிகள் குறைவாக உள்ளதை பார்த்த அவர் தினமும் இப்படித்தான் வழங்கப்படுகிறதா என்று மாணவர்களிடம் கேட்டார். சமையலுக்காக 5½ கிலோ காய்கறி வாங்கியதாக உள்ளது. ஆனால் உணவில் காய்கறிகள் ஏன் இவ்வளவு குறைவாக உள்ளது என்று உணவு சமைத்தவரிடம் கேட்டபோது, மவுனமாக இருந்தார். அதைத்தொடர்ந்தது எச்சரிக்கை செய்த கலெக்டர், இனி இது போன்ற குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர், காளியப்பன் என்ற மாணவனுக்கு பிறந்த நாள் என்பதால் சாக்லெட் வாங்கிவரச்சொல்லி, அந்த மாணவனுக்கு வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.