திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உழவர் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ், வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகில் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் காய்கறிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய விவசாயிகள் யாரும் சரிவர வராததால் கடந்த சில ஆண்டுகளாக சந்தையில் விற்பனை நடைபெறவில்லை. இந்த நிலையில், உழவர் சந்தையில் மீண்டும் விற்பனை நடைபெற தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்தனர்.
இதையடுத்து உழவர் சந்தையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் யாரும் சரிவர வராததால் உழவர் சந்தை மீண்டும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனிடையே, உழவர் சந்தை சீராக இயங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமையிலான கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் உழவர் சந்தை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் கூடையில் காய்கறிகளை வைத்துக் கொண்டு அவர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.