திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சிறப்பாக செயல்பட்ட மாணவர் தலைவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் பள்ளியில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட மாணவர் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுக்களில் தன்சுத்தம், காலை வழிபாட்டுக் கூட்டம், இடைவேளை நேரங்களில் மாணவர் கண்காணிப்பு போன்ற செயல்களை சிறப்பாக மேற்கொண்ட மாணவர் தலைவர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் அறிவுடைநம்பி, கெளரி, சுடர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடந்த இரண்டாம் பருவத்தில் சிறப்பாக செயல்பட்ட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 மாணவர் குழுக்களின் தலைவர்களான குணசேகரன், இனித்தா, அய்யனார், ரம்யா, திவ்யா மற்றும் துணைத் தலைவர்கள் புருஷோத்தமன், சாருலதா, மாதேஷ், செபாஸ்டின் ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அருண்குமார், மார்கிரேட் மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.