திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் ஆகியவற்றை அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும், திருவண்ணாமலை-வேலூர் சாலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து ஆட்சியர் விளக்கினார். மேலும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலவச தலைக்கவசங்களை அவர்களுக்கு வழங்கினார்.
இதையடுத்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி பேருந்தை ஆட்சியர் திறந்து வைத்து கண்காட்சியைப் பார்வையிட்டார். நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி (திருவண்ணாமலை), முருகேசன் (ஆரணி), கருணாநிதி (செய்யாறு) மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.