திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. சமீபத்தில் அணை முழு கொள்ளளவு நீர் நிரம்பியதால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, விவசாய பாசனத்திற்காக தொடர்ந்து 100 நாட்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய் வழியாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 80 அடியாக குறைந்தது. தற்போது, சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருவதால் வினாடிக்கு 580 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80. 95 அடியாக அதிகரித்துள்ளது என உதவி செயற்பொறியாளர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.