சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் அன்னதானம் வழங்குவோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று (மே 9) நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர், திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சித்திரை மாத பௌர்ணமியன்று சுமார் 10 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்ற 137 பேருக்கு மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் அனுமதிக் கடிதங்களை வழங்கிப் பேசியதாவது: சித்திரை மாத பௌர்ணமியன்று மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். அன்னதானம் வழங்குவோர் உணவு மேலாண்மைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடம் இருந்து மட்டுமே சமைப்பதற்கான மூலப்பொருள்களை வாங்கியிருக்க வேண்டும். அன்னதானம் வழங்கும் இடத்திலேயே உணவைத் தயாரிக்க வேண்டும். தரமற்ற முறையில் அன்னதானம் தயாரித்து வழங்குவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.