இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தானியங்களை விற்பனை செய்யும் வகையிலான இயற்கை விவசாயிகளின் வாரச்சந்தை தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை மகிழம் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இந்தச் சந்தை நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள மதி விற்பனை வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்தின் நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
விவசாயிகள் கூட்டமைப்பின் உறுப்பினரும், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளருமான வி. பழனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாரச் சந்தையை தொடங்கி வைத்தார். சந்தையில் செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை முறையில் விவசாயம் செய்யும் 20 விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் நிலங்களில் விளைந்த கீரைகள், பாரம்பரிய அரிசி, பனை பொருள்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், மதிப்பு கூட்டப்பட்ட சத்துமாவு, ஊறுகாய், தின்பண்டங்கள், பாரம்பரிய அரிசி பாயாசம், அவல், மூலிகைச் செடி, கொடி உருளை, நட்சத்திர பழம், நாட்டு நெல்லி, சிறுதானிய வகைகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, குதிரைவாலி, சீரக சம்பா, கைக்குத்தல் அரிசி போன்றவற்றையும், இதற்கான விதைகளையும் விற்பனை செய்தனர்.
இதில், களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ். சுமதி, கெளரி, சத்தியப்பிரகாசம், சந்திரசேகர், வெங்கட்ராமன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.