செய்யாறு வேளாண் வட்டாரத்தில் செங்காடு, மதுரை, கொருக்கை, பெரும்பள்ளம், பல்லி, நெடும்பிறை, தூளி ஆகிய கிராமங்களில் நடப்பு பருவத்தில் உளுந்து, மணிலா, நெல் விதைப் பண்ணைகள் மூலம் சுமார் 120 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளன. இவ்வாறு பயிரிடப்பட்டுள்ள விதைப் பண்ணைகளை மாவட்ட விதைச் சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் த. குணசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, உளுந்து பயிர்களில் அதிகளவு சாம்பல் நோய் காணப்படுவதை விவசாயிகளுக்கு சுட்டிக்காட்டி, அதை கட்டுப்படுத்தும் முறைகளை தெரிவித்து அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஜெ. சுந்தரமூர்த்தி, உதவி அலுவலர் த. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.