திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 18-வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய்த் துறை சார்பில் செ. நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும், உரிய படிவங்களை நிறைவு செய்வது குறித்தும் துணை வட்டாட்சியர் பாண்டியம்மாள் விளக்கிக் கூறினார். தொடர்ந்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சக்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செங்கம் வட்டாட்சியர் முருகன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர்கள் திருநாவுக்கரசு, பாண்டியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் வெங்கடாசலபதி கலந்து கொண்டு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.