திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையம் சார்பில் பல்வேறு பகுதிகளில் 230-க்கும் மேற்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றச் செயல்கள் நடவாதவாறு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊர்வலமாக வந்து காவல் நிலையத்தில் பாராட்டு விழா நடத்தினர். இதில், டிஎஸ்பி டி. பாண்டீஸ்வரி மற்றும் நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் சுந்தரேசன் மற்றும் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து பாராட்டினர். மேலும், டிஎஸ்பி பாண்டீஸ்வரி புத்தாண்டை ஒட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.