திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் ஏரி மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை ஆரணி கிராமிய போலீசார் பறிமுதல் செய்தனர். நெசல் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் சரவணன் (40) அந்தக் கிராமத்திலுள்ள ஏரியிலிருந்து டிராக்டரில் மண் கடத்திச் செல்வதாக ஆரணி கிராமிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, நெசல் கிராமம் அருகே அனுமதியின்றி ஏரி மண் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தார். மேலும், இது தொடர்பாக சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.