திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தும்பலபட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார்(17). இவர் குறிச்சிக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பொதுத்தேர்வுகள் முடிவடைந்தது. இந்த நிலையில் சக மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு வசந்தகுமார் நேற்று வாளவாடி அருகே உள்ள பிஏபி பிரதான கால்வாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து தகவல் தளி போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்த போலீசார் வசந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு உடன்படித்த மாணவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். பின்னர் வசந்தகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த மாணவன் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதும் படிப்பு மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கியதும் குறிப்பிடதக்கது. இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.