திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, செந்நாய், சிறுத்தை, புள்ளிமான், கடமான், புனுகுப் பூனை, குரைக்கும் மான், கீரிப்பிள்ளை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, கரடி, கருமந்தி, உடும்பு, காட்டெருமை, மலைப்பாம்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர்காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்றுமுதல் உடுமலை, அமராவதி, கொழுமம் மற்றும் வந்தரவு வனச்சரகத்தில் குளிர்கால கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணி வருகின்ற 14-ம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டலப் பகுதியான கொழுமம், வந்தரவு வனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வனப்பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.