திருப்பூர்: காலிப் பணியிடங்களில் அதிகாரிகளை நியமிக்க கோரிக்கை

67பார்த்தது
திருப்பூர்: காலிப் பணியிடங்களில் அதிகாரிகளை நியமிக்க கோரிக்கை
திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் 3 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. விவசாயம், தொழிற்சாலைகள், வீடுகள், கல்விக்கூடங்கள் அடங்கியுள்ளன. 

இந்த பகிர்மான வட்டத்தில் 10 உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், 30 உதவி மின்பொறியாளர்களும் உள்ளனர். 20 துணை மின்நிலையங்கள் உள்ளன. திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளது. பகிர்மான வட்டத்தில் கடந்த 6 மாதங்களாக செயற்பொறியாளர் பதவியும் காலியாக உள்ளது. பொறுப்பு அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் கால தாமதம் ஏற்படுகிறது. இதன்காரணமாக மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை உரிய காலத்தில் நிவர்த்தி செய்ய முடியாமல் உள்ளனர். உடனடியாக காலியாக உள்ள இடங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி