திருப்பூருக்கு கூரியர் மூலம் புகையிலை பொருட்கள் வந்துள்ளதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து போலீசார் கூரியர் நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஓடக்காடு பகுதியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் பெங்களூருவில் இருந்து வந்த சந்தேகத்திற்கிடமான பார்சலை சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கூரியரை எடுக்க வந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 63 வேலம்பாளையத்தைச் சேர்ந்த கவின்குமார் (வயது 35) என்பவர் விற்பனைக்காக பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கூரியர் மூலம் வரவழைத்துள்ளார். தொடர்ந்து தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கவின்குமார் தனக்குப் பழக்கமான பல்லடத்தைச் சேர்ந்த மருதாயி (27) என்பவரை புகையிலை பார்சலை எடுக்கச் சொல்லியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் கவின்குமார் மற்றும் மருதாயி ஆகியோரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.