தாராபுரம் குண்டடம் எரகாம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி-50. 1-7-2015 அன்று தாராபுரம் பகுதியில் இருந்து பூளவாடி சாலையில் தொப்பம்பட்டி பிரிவு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தாராபுரத்தில் இருந்து பூளவாடி செல்வதற்காக வந்த அரசு பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே வேலுச்சாமி உயிர் இழந்தார்.
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்தில் இறந்து போன வேலுச்சாமி மனைவி காந்திமதி மற்றும் மகள்கள் கவிதா, வசந்தாமணி ஆகியோர் நஷ்டஈடு கோரி தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ. 7 லட்சத்து 90 ஆயிரம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். உரிய காலத்தில் தொகை வழங்காததால் வட்டி செலவு தொகையுடன் சேர்த்து முழுத் தொகையான ரூ. 12 லட்சத்து 46 ஆயிரத்து 554 செலுத்தக் கோரி வேலுச்சாமியின் குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சரவணன் நஷ்டஈடு தொகையை வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். தாராபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த அரசுபஸ் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தாராபுரம் வழக்கறிஞர் எஸ். டி. சேகர் ஆஜராகி வாதாடினார்.