திருவானைக்கா அகிலாண்டேசுவரி திருக்கோயிலுக்கு நன்கொடையாக உபயதாரர்கள் சார்பில் ரூ. 12. 50 லட்சம் மதிப்பில் வெண்கல மணி அளிக்கப்பட்டுள்ளது.
திருவானைக்கா கோயிலில் நாள்தோறும் உச்சி கால பூஜையின்போது சாமி சன்னதி வாயிலில் உள்ள மணி மண்டபத்தில் இருக்கும் பெரிய மணி ஒலிக்கப்படும். 1920-ஆம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணி பழுதடைந்ததன் காரணமாக, கடந்த 30 ஆண்டு காலமாக பெரிய மணி ஒலிக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சாம்பு. சுப்ரமணியன் மற்றும் கே. பாலசுப்ரமணியன் உபயதாரர்கள் சார்பில் ரூ. 12. 50 லட்சம் மதிப்பில் புதிய வெண்கல மணி கோயிலுக்கு வழங்கப்பட்டது. இந்த மணி திருவாரூர் ஸ்தபதி சீனிவாசன் வடிவமைப்பில் 520 கிலோ எடையும், 113 செ. மீ, உயரம், 287 செ. மீ, சுற்றளவும் கொண்டு அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்தர்களின் பார்வைக்காக 4-ஆம் பிரகாரத்தைச் சுற்றி மங்களவாத்தியத்துடன் புதிய வெண்கல மணி எடுத்து வரப்பட்டது.
புதன்கிழமை மணியை மணி மண்டபத்தில் பொருத்தும் பணிகள் நடைபெறும். வரும் வெள்ளிக்கிழமை உச்சி கால பூஜை முதல் ஒலிக்கப்பட உள்ளது என்றார் கோயில் உதவி ஆணையர் ஆ. ரவிச்சந்திரன்.