மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து அரசு பொது போக்குவரத்தையும், ஆட்டோ, கார், வேன் உட்பட மோட்டார் வாகன சிறு தொழில் நிறுவனங்களை முற்றிலும் கார்ப்பரேட் நிறுவன மயமாகி வருவதை கண்டித்தும், 2019 புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்துசெய்து மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்.
அபராதம், இன்சூரன்ஸ், எப். சி, ஓட்டுனர் உரிமம், சாலை வரி, சுங்கச்சாவடி, வாகன பதிவு, வாகன தகுதிச் சான்று கட்டணங்களை கடுமையாக உயர்த்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சிஐடியூ திருச்சி மாநகர் ஆட்டோ, சாலை போக்குவரத்து, அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், அரசு விரைவு போக்குவரத்து கழக அருள், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க சுரேஷ், அரசு போக்குவரத்து கழக கருணாநிதி, ஆட்டோ சங்க சார்லஸ், வெற்றிவேல் ஆகியோர் பேசினர். முடிவில் அரசு போக்குவரத்து கழக சிங்கராயர் நன்றி கூறினார்.