தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் மாநில தழுவிய கோரிக்கை மனு கொடுக்கும் இயக்கம் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சியில் நேற்று (அக் 3) தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொது செயலாளர் முத்துவிஸ்வநாதன், காவேரி டெல்டா பாசன வாய்க்கால் சங்கத்தின் நிர்வாகி வெங்கடேசன் தீட்சிதர் மற்றும் 25க்கு மேற்பட்ட விவசாயிகள் திருச்சி தென்னூரில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் தலைமை பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அம்மனுவில் தமிழ்நாடு மின்சார வாரியம் தட்கல் திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்கு வேளாண் மின் இணைப்பு 90 நாட்களில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகள் தக்கல் முறையில் பணம் செலுத்தினாலும் 90நாட்கள் கடந்த பின்னும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
தட்கல் திட்டத்தில் கடந்த 2ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 30ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பணம் கட்டியும் மின் இணைப்பு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மின்சார வாரியம் காலதாமதம் செய்யாமல் விவசாயிகளுக்கு உடனடியாக மின்சாரத்தை வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் விரைவில் தங்களுக்கு மின் இணைப்பு வழங்காவிட்டால் வருகிற 22ஆம் தேதி சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்