ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் தொகுப்பூதியத்திலாவது பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சியில் நடந்த தர்ணா போராட்டத்தில், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது, மறு நியமன போட்டித் தேர்வை முற்றிலும் நீக்கிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கை 177ம் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின், 11 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
40 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். முதற்கட்டமாக, 4 ஆயிரம் பேரை குறைந்தபட்ச தொகுப்பூதியத்தில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (செப்.,24) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வடிவேல் சுந்தர் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் சண்முகப்பிரியா உட்பட, 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.