மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் கே. என். நேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட பீமநகர் மார்சிங்பேட்டை பகுதியில் வட்டச் செயலர் செல்வம் ஏற்பாட்டில், அப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, நோட்டுப் புத்தகம், ஏழைகளுக்கு வேட்டி, சேலை என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே. என். நேரு வழங்கினார். பின்னர் கட்சிக் கொடியேற்றி கருணாநிதி படத்துக்கு அவர் மாலை அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநகரச் செயலரும், மேயருமான மு. அன்பழகன், மண்டலக் குழுத் தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வம், மண்டிசேகர், சேர்மன் துரைராஜ், வழக்குரைஞர் மணிவண்ண பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.