பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள பெண் காவல் புலனாய்வு அதிகாரிகள், பெண் காவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திருச்சி காவல்துறை பணியிடைப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
பயிற்சிக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமை வகித்தார். பயிற்சியில் திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு பேசுகையில், இளஞ்சிறார் நீதி சட்டம் 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆகிய சட்டங்களின் முக்கியப் பிரிவுகள், குழந்தை நலக்குழு, இளஞ்சிறார் நீதிக் குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி மையங்களின் செயல்பாடுகள், பணிகள், நடைமுறைகள் குறித்து விவரித்தார்.
தொடர்ந்து, கிராம, வட்டார, மாவட்ட, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மண்டல அளவிலான குழந்தைப் பாதுகாப்புக் குழுக்கள் காலாண்டுக்கு ஒருமுறையும், பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் மாதந்தோறும் நடக்கும் நாளில் காவலர்களின் பங்கேற்பு குறித்து விளக்கினார். பயிற்சியில் 95-க்கும் மேற்பட்ட திருச்சி மாநகர், புறநகர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், ரயில்வே காவலர்கள் கலந்துகொண்டனர்.