பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28ஆம் தேதி துவங்கி நேற்றுடன் (ஏப்ரல் 15) முடிவடைந்தன. இந்த நிலையில் பவானி பகுதியைச் சேர்ந்த 4 மாணவிகள், சித்தோடு பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி என ஐந்து பேர் தேர்வு எழுதச் சென்று வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் கிடைக்காததால் பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த ஐந்து மாணவிகளில் ஒரு மாணவி மொபைல் போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த மொபைல் எண்ணை சோதனை இட்டபோது அது சமயபுரம் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
இதை அடுத்து சமயபுரம் போலீசாருக்கு பவானி காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் சமயபுரம் கோவில் அருகில் இருந்த ஐந்து மாணவிகளையும் மீட்டு பவானிக்கு அனுப்பி வைத்தனர். தேர்வு முடிந்து மாணவிகள் அனைவரும் சமயபுரம் தேர் திருவிழாவை பார்க்க வந்ததாகவும், பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காமல் வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.