திருச்சிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், பஞ்சப்பூரில் 236 கோடி மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிகல் நாட்டினார். 408. 36 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், 128. 94 கோடியில் கனரக சரக்கு முனையத்தை திறந்து வைத்தார். 463. 30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், 276. 95 கோடிக்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, 830. 35 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின், நடந்த விழாவில் அவர் பேசியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் தி. முக. , அரசின் சாதனைகள் பிரமிக்கும் வகையில் உள்ளது. தி. மு. க, அரசின் வெற்றிப் பயணம் துவங்கியதே திருச்சியில் இருந்துதான். ஏற்கனவே, இங்கு நடந்த கூட்டத்தில் ஏழு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறினேன். பெரும்பாலானவற்றை நான்கு ஆண்டுகளில் எட்டியிருக்கிறோம். பொருளாதாரத்தில் இதுவரை பார்க்காத 9. 6 விழுக்காடு வளர்ச்சியை எட்டி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறோம். எந்த பிரிவினரும் விட்டுப் போகாத வகையில் திட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறோம். நான்கே ஆண்டுகளில் விடியல் ஆட்சியில் நிகழ்த்திய சாதனைகளை ஓப்பிட்டு பார்க்க வேண்டும். இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.