திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் மழை மற்றும் காற்றுக்கு தப்பிய சம்பா நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரம் போட்டு பராமரித்து வந்தனர்.
பல்வேறு சிரமங்களுக்கு இடையே வளர்ந்து தற்போது அந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "முன்பெல்லாம் மூன்று போகம் சாகுபடி செய்வோம்.
தற்போது ஒன்று அல்லது இரண்டு போக சாகுபடி மட்டுமே நடக்கிறது. நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி அழுகின வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி, பயிர்களுக்கு உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை தெளித்தோம்.
அதன் காரணமாக பயிர்கள் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகிவிட்டது. இன்னும் பத்து அல்லது 14 நாட்களில் அறுவடை பணி தொடங்கி விடுவோம்" என்றனர்.