தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஏழை, எளிய அரசுப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஹிந்தி மொழி திணிக்கப்படவில்லை. ஒருவேளை ஹிந்தி மொழி திணிக்கப்பட்டால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து, திமுக எம்பி கனிமொழி தவறாக பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு தமிழர், மத்திய நிதி அமைச்சராக செயல்படுவதே மிகப்பெரிய பெருமை. தமிழ் மொழிக்காக நாங்களும்தான் போராடினோம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உழைப்பால் உயர்ந்தவர். குடும்ப அரசியலில் ஆட்சிக்கு வந்து துணை முதல்வராக ஆனவர் அல்ல. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, என திமுக கூட்டணி கட்சியில் இருக்கக்கூடிய கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தது உண்மையே ஆகும் என்றார்